Showing posts with label சிறு தொடர் 4 நிறைவு. Show all posts
Showing posts with label சிறு தொடர் 4 நிறைவு. Show all posts

Friday, 25 January 2013

தங்கமே தங்கம் (4)

போலீஸ் ஸ்டேஷன் போய் வந்தவிவரம்   எப்படியோ அக்கம் பக்க வீட்டுக்காரர்களுக்கெல்லாம்    அதற்குள் பரவி விட்டது. ஒவ்வொருவராக துக்கம் விசாரிக்க வந்து விட்டார்கள். ‘‘என்னம்மா ஆச்சி?’ன்னு   சிலர் உண்மையான அக்கறையுடன்    கேட்டார்கள்

ஒவ்வொருவருக்காக பதில் சொல்ல    அலுப்பாக இருந்தது. சிலரோ என் காது படவே, ‘‘புருஷன் போனபிறகும் கூட இவ்வளவு நகைகள் ஏன் போடணும்.? இப்ப என்னாச்சி?’’ என்று நாக்கில் நரம்பில்லாமல் பேசிவிட்டுப் போனார்கள்.

‘‘ஏன் பாட்டி புருஷன் இல்லாதவங்க நகையெல்லாம் போடக் கூடாதா?’’ என்றாள்  ரீமா.

‘‘அப்ப்டில்லாம் இல்லேம்மா. நான் ஏன் போட்டுட்டு இருந்தேன் தெரியுமா?  உன் தாத்தா சாகும்முன்பு  என்னிடம், ‘பாக்கியம்! நான் போயிட்டா கூட என் ஞாபகார்த்தமா
 இந்த நகைகள் உன் உடம்பிலேயே இருக்கணும். ஒரு நகையைக்கூட கழட்டக்கூடாது’ன்னு சொன்னார்". நான் கூட 'ஏங்க இப்படில்லாம் அபசகுனமாகப்பேசுரீங்க்? அப்படில்லாம் எதுவும் நடக்காது’ன்னேன். ஆனா உன் தாத்தா சொன்னது போல அவர் முந்திக்கிட்டார்.’’

‘‘அவர் சொன்னவார்த்தைக்கு கட்டுப்பட்டுதான் நான் எல்லா நகையும் எப்பவும் போட்டுகிட்டே இருந்தேன்மா. இதப்போயி எல்லார்கிட்டயும் சொல்லி க்கிட்டு இருக்கமுடியுமா?’’

"சரி பாட்டி, புருஷன் இல்லேன்னா ஏன் நகை போடக்கூடாதுன்னு சொல்றாங்க?"  விடாப்பிடியாக ரீமா கேட்கவும்,

"கொழந்தே!  நாம் பிறந்த குடும்பத்துக்குன்னு ஒரு பாரம்பரியம், சம்பிரதாயம், தலைமுறை, தலைமுறையாக வந்த  பழக்கவழக்கங்கள்னு சிலது உண்டும்மா.அதை நாம மதிக்கணும் மறியாதை கொடுக்கணும். கடைப்பிடிக்கவும் செய்யணும்.’’

‘‘என் தலைமுறையில் கூட கொஞ்சம் பரவால்லே, தலைமுடியும், கலர்புடவையும் தப்பிச்சுடுத்து, எனக்கு முந்தய தலைமுறை பெண்கள் எவ்வளவெல்லாம் க்‌ஷ்டங்கள் அனுபவிச்சு இருக்காங்க தெரியுமா?’’

‘‘என் பாட்டில்லாம் ரொம்ப கஷ்டங்கள் அனுபவிச்சிருக்காங்க. அந்தக் காலத்துல பெணகளுக்கு படிப்பு எதுக்குன்னு கல்வி  அறிவு கொடுக்க மறுக்கப்பட்டார்கள். அதனால தன்னால யோசித்து முடிவெடுக்க முடியாமலே வளர்ந்துட்டாங்க. பிறந்ததும் பெற்றோருக்கு அடங்கி இருந்தாங்க, திருமணம் முடிந்ததும் கணவ்ருக்கு அடங்கி இருந்தாங்க வயசு காலத்தில் மகனுக்கு அடங்கி இருந்தாங்க.’’

 ‘‘ஏன் தெரியுமா... அவர்கள் எப்பவும் ஒருவரைச்சார்ந்தே இருக்க வேண்டிய நிலைமை. தன்னால எந்த முடிவு எடுக்கும் சுதந்திரமும் கிடையாது.  எதானும் கேள்வி ஏன் எதற்குன்னு  கேட்டாக்கூட பெரியவங்க சொன்னா சரின்னு  கேட்டுக்கணும், ஏன் எதுக்குன்னுல்லாம்கேள்வி கேக்கக்கூடாதுன்னே சொல்லி குட்டி குட்டி, குட்டுப்பட்டே வளர்ந்துட்டாங்க.இது ஒரு வீட்டு நிலமை இல்லே, வீட்டுக்கு வீடு இதே கதைதான். அதனால இயல்பா ஏத்துகிட்டாங்க.’’

‘‘புருஷன் தவறிட்டான்னா அந்த மனைவி சின்ன வய்சுப்பொண்ணோ, பெரிய வய்சுப்பொண்ணோ எப்படி இருந்தாலும் சரி அவங்க தலை மொட்டை அடிக்கப்பட்டு 9 கஜம் வெள்ளைப்புடவையும் சுத்தி விட்டு வீட்டின் ஒரு இருண்ட மூலையில் தள்ளிவச்சுடுவாங்க. அவங்க வெளி ஆண்களை பார்க்கவோ பேசவோ கூடாது, சுப காரியங்களில் கலந்து கொள்ள்வும் கூடாது,’’

‘‘அதுமட்டும் இல்லே... சாப்பாட்டு விஷயத்தில்கூட கட்டுப்பாடுகள், அமாவாசை, பௌர்ணமி,  சனி ஒரு பொழுது, ஷஷ்டி அந்த விரதம் இந்த   விரதம் என்று பாதி நாள் பட்டினி போட்டுவாங்க. குளிரோ மழையோ வெய்யிலோ காலை 4 மணிக்கு எழுந்து குளிரக்குளிர நதியில் போயி நீராடி விட்டுத்தான் அடுப்பையே பத்தவைக்கணும் என்றகட்டுப்பாடுகள்.’’

‘‘மொத்தத்தில் புருஷனைப்பறி கொடுத்த பெண்ணுக்கு மீதி உள்ள வாழ் நாட்கள் ஒரு பனிஷ்மெண்டாகத்தான் இருக்கும். என் தலைமுறையில் கொஞ்ச்ம் இம்ப்ரூவ்மெண்ட் வந்திச்சி. சில துணிச்சலான பெண்கள் எதிர்ப்புக்குரல் எழுப்பினாங்க.’’

‘‘இதில் ஆச்சரியம் என்னன்னா முற்போக்கு சிந்தனை உள்ள சில ஆண்களும் சப்போர்ட் பண்ணினாங்க. கொஞ்சம் கொஞ்சமாக கலர்ப் புடவைக்கும்   சின்ன சின்ன நகை களும் போட ஆரம்பிச்சாங்க.
இப்பல்லாம் பெண்களும் தங்களுடைய   கல்வித்தகுதியை வளர்த்துக்கிட்டாங்க  ..  இப்ப உள்ள கால கட்டத்துல ஆண்களுக்கு சமமா பெண்களும் வெளில இறங்  கி வேலைக்குப்போயி சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டாங்க. தன் காலில் தான் நிற்கும் தைரியம் கொடுத்த துணிவு’’

‘‘நாமபொறந்ததிலேந்தே நம்ம பெற்றோர் நமக்கு பொட்டுவச்சு பூ வெச்சு நகை போட்டு அழகு பார்த்திருக்காங்க. புருஷன் கட்டுரது தாலியும் மெட்டியும் மட்டும்தானே. அதை ‌வேணா  நீக்கிடலாம். மத்ததை எல்லாம் எதுக்கு நீக்கணும் அதெல்லாம் மூட நம்பிக்கைகள் என்று துணிச்சலா பேச ஆரம்பிச்சு அவங்க இஷ்ட்டப்படியே நடக்கவும் ஆரம்பிச்சுட்டாங்க. . அதிலும் தவறேதும் இருப்பதாக தெரியலேதான்.’’

‘‘ஆமா பாட்டி இதில ஏதும் தப்பிருக்கறதா தெரியல்லே. ஆமா, உங்க நகை ஏதானும் திரும்ப கிடச்சுதா இல்லியா?’’

‘‘ஓ...! எதையோ சொல்ல வந்து தேவை இல்லாம என்னல்லாமோ சொல்லிகிட்டு இருக்கேன் பாரேன். ரெண்டு வருஷம் போலீஸ்காரா இழுத்தடிச்சது தான் மிச்சம். ஒரு திருகாணிகூட திரும்பக் கிடைக்கலே. போலீஸ்காராள்ல சிலபேரு நல்லவங்களாகவும் இருக்காங்கதான். ஆனா நமக்கு கிடைச்சது மோசமான அனுபவம்.  அதுக்கு அவங்களை ஏன் குறை  சொல்லணும்?’’

‘‘எதுமேலயும் அதிக ஆசை வைக்கக்கூடாதுங்குறதுக்கு   இந்த சம்பவம் எனக்கு நல்ல படிப்பினை ஆச்சும்மா. அதிலேந்து   நகை போடுறதையே விட்டுட்டேன்.  உன் அம்மாவிடம் கூட சொல்லுவேன் - ‘வெளில போகும் போது தாலிக்கொடிமட்டும் தங்கத்தில் போட்டுக்கோ. மத்ததெல்லாம் கவரிங்கே போதும். இப்ப தங்கம் விக்குற விலையில் யாரு என்ன பண்ணூவாங்கன்னே சொல்ல முடியாது’ன்னு.’’

‘‘சரி பாட்டி! இவ்வளவு நாளா இதையெல்லாம் நீ என்கிட்ட ஏன் சொல்லவே இல்லே?’’   என்றாள் பேத்தி.

‘‘சொல்ல சந்தர்ப்பமே அமையல்லியே,   தவிர இது சொல்லிக்கும்படி அப்படி முக்கியமான விஷயமா தோணலேம்மா.’’

‘‘என்ன பாட்டி இப்படி சொல்லிட்டீங்க். இப்படி எவ்வளவு சுவாரசியமான ப்ளாஷ் பாக் உன் லைஃப்ல நடந்திருக்கு ஒண்னொண்ணா எனக்கு சொல்லு. நான் இந்த சம்பவத்தையே ஒரு சிறு கதையா எழுதி ஒரு பத்திரிக்கைக்கு அனுப்பப் போறேன் பாரு’’   என்றாள்.

‘‘போடி... பத்திரிக்கையில் எழுதும்படி இது ஒன்னும்  சுவாரசியமான விஷயம் இல்லே. அதுவுமில்லாம நீ ஜர்னலிஸ்ட்டா ஆகணும்னு ஆசைப்படறே இல்லியா? அப்போ ஒன் பார்வையை   விசாலப்படுத்தி   உன்னைச் சுத்தி   நடக்கும் நாலாவித  விஷயங்களையும் பாரு,   டெய்லி ந்யூஸ் பேப்பரில் வரும் ஒருவரிச் செய்தியில் கூட   பல கதை அடங்கி இருக்கும்  . சும்ம ஒருத்தரையே சுத்தி வராதே.’’

‘‘பாட்டி நீ சொல்லறதும் சரிதான். ஆனாகூட நீ சொன்ன விஷயம் எனக்கே கதை கேக்குற மாதிரி சுவாரசியமா இருந்துச்சி கண்டிப்பா படிக்கிறவங்களும் ரசிப்பாங்க பாரேன்’’ என்றாள்.

‘‘சரி, சரி... கோவிலுக்குப் போறேன்னு சொல்லிட்டு  போன பாட்டியும் பேத்தியும் எங்க ஊர் சுத்தப் போயிட்டாங்களோன்னு வீட்ல உன் அப்பாவும் அம்மாவும் கவலைப்படுவாங்க. இருட்டிடுச்சி, வா வீட்டுக்கு போலாம்’’ என்று பாட்டி சொல்ல, இருவரும் வீட்டை நோக்கி நடந்தார்கள்.

                                                               (முற்றும்)

read more "தங்கமே தங்கம் (4)"